தி.மு.க. சார்பில் 1-வது வார்டில் ஜெயராஜ், 2-வது வார்டில் சண்முகலட்சுமி, 11-வது வார்டில் சின்னத்துரை ஆகியோரும், சுயேட்சை வேட்பாளர்களாக 1-வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, 2-வது வார்டில் ராஜேஸ்வரி, 11-வது வார்டில் சிவக்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது தி.மு.க. சார்பில் 1,2,11 ஆகிய வார்டுகளில் மனுதாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேருக்கும் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துக்கள் போலியாக இருந்தது பரிசீலனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மனுக்களையும் தேர்தல் அலுவலர்கள் தள்ளுபடி செய்தனர். இதன் காரணமாக சுயேட்சை வேட்பாளர்களான நாகராஜா, ராஜேஸ்வரி, சிவக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டது. மற்ற 9 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவது உறுதியானது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 1-வது வார்டுக்கான விவரங்களை மட்டுமே அறிவிப்பு பலகையில் ஒட்டினர். மற்ற 2 வார்டுகளுக்கான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் அங்கு 2 வார்டுகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். உடனடியாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

இந்நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று காலையிலேயே வேட்பாளர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வாபஸ் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. தி.மு.க.வை சேர்ந்த சாந்தி என்ற வேட்பாளர் மட்டும் வாபஸ் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1 முதல் 6 வார்டுகளில் வேட்பாளர்கள் விலகல் எதுவும் இல்லை என்று அறிவிப்பு பலகையில் கடிதத்தை ஒட்டினர். அதன்பின்னர் வார்டுகள் 1, 2, 11-ல் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்காமல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கனோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். 3 வார்டு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகளை சிறைபிடித்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் சங்கர், ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கோவில்பட்டி ஆர்.டி.ஓ சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் வெற்றி அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து செல்போன் வழியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் போராட்டக்காரர்களிடம் பேசினர். 1 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர். இதற்கிடையே நள்ளிரவு 1 மணியளவில் கடம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நகல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட செயல்அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 13 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. அங்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons