சென்னை:வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை உருவானது. இது வலுவடைந்து, சனிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாகவும், நண்பகலில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும், நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக வலுபெறக்கூடும். மேலும் இது , மே 10-ஆம் தேதி மாலை வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிஸா கடற்கரை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இந்த புயல் காரணமாக, மே 12-ஆம் தேதி தேதி வரை மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .

மத்திய வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு மணிக்கு 105 கி.மீ. முதல் 115 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 125 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று

வீசக்கூடும். இதுபோல, வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும்.

வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 11, 12 ஆகிய தேதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிஸா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடல் பகுதி பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons