உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 2008ஆம் ஆண்டின் உணவு நெருக்கடிக்குப் பிறகு முக்கிய தானியங்களை அதிகபட்ச விலையில் வைத்திருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் குறைவான விலை, போதுமான கையிருப்பு காரணமாக உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.

அதன் மொத்த ஏற்றுமதிகளில் ஏறக்குறைய 40 விழுக்காடு ஆப்ரிக்க நாடுகளுக்கு குறிப்பாக பெனின், செனகல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால் 2024ஆம் ஆண்டில் மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமரான நரேந்திர மோடி, உள்நாட்டில் அரிசி விலை உயர்வைத் தடுக்கவும் உள்நாட்டு பயனீட்டாளர்களைப் பாதுகாக்கவும் அரிசி மீதான கட்டுப்பாடுகளை இறுக்கி வருகிறார்.

“உள்நாட்டில் அரிசி விலை ஏறுமுகமாக இருந்தால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது,” என்று இந்தியா, ஆசிய, முன்னைய ஜப்பானிய நோமுரா ஹோல்டிங்ஸ் ஆகியவற்றுக்கான தலைமை பொருளியலாளர் சோனல் வர்மா தெரிவித்தார்.

“தேர்தலுக்குப் பிறகும் உள்நாட்டு அரிசி விலை நிலையாக இல்லையென்றாலும் கட்டுப்பாடுகள் தொடரும்,” என்றார் அவர்.

இந்தியா ஏற்றுமதிக்கான வரியை அமல்படுத்தி, குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

இதையடுத்து கடந்த ஆகஸ்டில் 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அரிசி விலை அதிகரித்தது.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அரிசி இறக்குமதியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன.

அக்டோபரிலும் அரிசி விலை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட 24 விழுக்காடு அதிகரித்தது என்று ஐநா உணவு, வேளாண் அமைப்பு கூறியது.

மோடி அரசாங்கம், உள்நாட்டுக்குப் போதுமான அரிசி விநியோகம் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது என்று இந்தியாவின் அரிசி ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதிக்கும் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் பி.வி. கிரிஷ்ணா ராவ் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு வாக்களிப்பு முடியும் வரை ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசாங்கம் வைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக ஆசியாவில் விளைச்சல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலகின் அரிசி கையிருப்பு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையலாம்.

அப்போது அரிசி சந்தையில் மேலும் நெருக்கடி ஏற்படும்.

உலகின் அரிசி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள தாய்லாந்து, வறண்ட பருவநிலை காரணமாக 23-24 ஆண்டில் உற்பத்தி ஆறு விழுக்காடு வீழ்ச்சியடையும் என்று கூறி அச்சுறுத்தியிருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons