இ.பி.எஸ் மார்ச் 25 முதல் சூறாவளி பிரசாரம்; மயிலாப்பூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் வாக்குசேகரிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்குகிறார். மார்ச் 25-ம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கும் அவர், தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்க உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை முதல் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அ.தி.மு.க தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ வேட்பாளர்களை ஆதரித்து அவர் மாநிலம் தழுவிய அளவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 25-ம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், பின்னர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரப் பயணத்தில், நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.
குறிப்பாக, மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை தென் மாவட்டங்களில் முகாமிட்டு நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தொண்டர்களிடையே உற்சாகத்தை விதைக்கவும் இந்தப் பயணம் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒருபுறம் இறுதியாகி வரும் நிலையில், அ.தி.மு.க-வின் இந்த அதிரடி பிரச்சாரத் திட்டம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.