தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியிலிருந்துவெளியேறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், அதிரடியாக ராஜ்யசபாவுக்கு சுயேச்சைஎம்.பி.,யாவதன் பின்னணியில், பல அரசியல் கணக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவின் தலைமைக்கு எதிராக, ஜி – 23 எனப்படும், 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.இந்த அதிருப்தியாளர்களின் குழுவின், மிக முக்கிய முகமே கபில் சிபல் தான். இவர் தான், மூத்த தலைவர்கள் பலரை தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தளித்து, ஆலோசனை மேற்கொண்டார்.
இன்னொரு மூத்த அதிருப்தி தலைவரான குலாம் நபி ஆசாத், ஊடகங்களில் பேசுவதை தவிர்த்தபோது, அதிரடியாக பேசி, பரபரப்பை ஏற்படுத்தியவரும் கபில் சிபல் தான்.இதற்காகவே, காங்., தொண்டர்கள், டில்லியில் உள்ள இவரது வீட்டை முற்றுகையிட்டு, முட்டை, தக்காளி வீசி எதிர்ப்பு காட்டியதும் நடந்தது. ஆனாலும், ‘காங்., கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை’ என, கபில் சிபல் கூறியிருந்தார்.மாற்று வழிராஜ்யசபா எம்.பி.,யான கபில் சிபல், தன் பதவிக் காலம் ஜூலையில் முடிவடைவதால், அது குறித்த சிந்தனையில் இருந்தார்.
கடந்த 2016ல், அப்போது உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியின் ஆதரவுடன் தான், காங்கிரஸ் வேட்பாளராக நின்று, கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி.,யானார்.தற்போது உத்தர பிரதேசத்தில், காங்கிரசுக்கு இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, நிச்சயம், காங்., சார்பாக நின்று மீண்டும் பதவியை பிடிக்க முடியாது என்பது, கபில் சிபலுக்கு தெரியும்.
இதனால், மாற்று வழிகளை யோசித்தார்.சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்காக, உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளில் கபில் சிபல் ஆஜராகி வருகிறார்.இதனால், இவருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் தர, இந்த மூன்று கட்சிகளுமே தயாராக இருந்தன. இருப்பினும், கபில் சிபல் சமாஜ்வாதியை தேர்ந்தெடுக்க சில காரணங்கள் உள்ளன.இவர் அக்கட்சி நிறுவனர் முலாயம் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். 2017ல், முலாயம் குடும்பத்தில் சண்டை வெடித்தபோது, கபில் சிபல் தான் தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு, கட்சியின் சைக்கிள் சின்னத்தை பெற்றுத் தந்தார்.தவிர, சமாஜ்வாதியில் உட்கட்சிப் பூசல் தற்போது பெரிய அளவில் உள்ளது. குறிப்பாக, சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வந்துள்ள கட்சியின் மூத்த தலைவரான அசம் கான், பெரும் கோபத்தில் உள்ளார்.கடும் நெருக்கடிஅவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகிலேஷ் யாதவுக்கு இருந்த ஒரே வழி, கபில் சிபலுக்கு ராஜ்யசபா சீட் தருவது தான். காரணம்,
இவர் தான் அசம் கானுக்காக லக்னோ உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, அசம் கானை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார். மற்றொரு பக்கம், மூத்த தலைவர்கள் பலருக்கும் சீட் கொடுப்பதில், காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, அவரவர் முயற்சியில் ‘சீட்’ பெற்று ராஜ்யசபாவுக்கு வந்தால் சரி என, அக்கட்சி கருதுவதால், கபில் சிபலின் வெளியேற்றத்தை, காங்கிரசும் வரவேற்பதாகவே தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.