ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது)தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித்சிங் தல்லேவால் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் விவசாயிகள் யாத்திரை குழு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியைஅவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து ஆதரவு கோரிய பின்னர் செய்தியாளர்களிடம் பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:
மத்திய அரசு அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அடியோடு அழிக்கும் நோக்கம் கொண்டது.
பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிற போது ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மறுப்பது ஏற்க முடியாது. ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நிலையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்திற்கு தகவல் அளிப்பதும், பத்திரிகைகளில் விளக்கம் அளிப்பதும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் முரணானது, எனவே தயாரிக்கப்பட்டிருக்கிற ஒப்பந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைத்து விவாதிக்க வேண்டும். விவசாயிகளுடன் கருத்து கேட்க வேண்டும்.
இதனை பின்பற்றாமல் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தன் விருப்பத்திற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுவதை ஏற்க முடியாது. பிரதமர் இது குறித்து எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
விவசாயிகளிடம் கருத்து கேட்டு பாராளுமன்றத்தில் அறிக்கையை இறுதிப்படுத்த வேண்டும்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு விவசாய கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். மாநிலங்கள் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்தோம். அவர் ஆதரவு அளிப்பதாகவும், வரும் 21ஆம் தேதி பிரதமர் புதுச்சேரி வரும்போது நேரடியாக இதுகுறித்து எடுத்துரைத்து பேச உள்ளதாகவும், கடிதம் மூலம் வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். புதுச்சேரி பயணம் பயனுள்ள வகையில் அமைந்தது.
இந்நிகழ்வில்
தமிழகத் தலைவர் பி.அய்யாக்கண்ணு,தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் கர்நாடக சாந்தகுமார், ஹரியானா அபிமன்யு, கொகார், மதுரை எல். ஆதிமூலம், திருவாரூர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் பொன் ராஜேந்திரன், புதுச்சேரி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சோமுபிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.