சென்னை:சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பல தடவை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மாநில அரசே செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு தமிழக அரசு பல தடவை கோரிக்கை விடுத்தது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டது.இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்ற அவர் சென்னை திரும்பியதும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.இதையடுத்து செப்டம்பர் 20-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வதால் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 24-ந்தேதி மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.மறுநாள் 25-ந்தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டு திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இது தொடர்பான கடிதத்தையும் வழங்குவார்.டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் மறைந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.சமீபத்தில் சீதாராம் யெச்சூரி மரணம் அடைந்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தார். எனவே டெல்லியில் உள்ள சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The short URL of the present article is: https://reportertoday.in/9ikd

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons