சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் (DPI) வளாகம் முன்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு, தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட அரசாணை 311 உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் காரணமாக DPI வளாகம் முன்பு வாகனங்கள் செல்வதில் கடும் இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் நுங்கம்பாக்கம் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆறாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும், இதுவரை முதலமைச்சர் அல்லது அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.