தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்நிலைக் குழு இன்று வியாழக்கிழமை மாலை கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியலை கட்சித் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கியது.

இந்நிலையில், அதிமுக சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படலாம் எனவும், இதற்காக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 50 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons