தமிழகம் முழுவதும் 1000 ரவுடிகள் பட்டியல் தயார்; நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவுசென்னை: தூத்துக்குடி அருகே போலீஸ்காவலர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு மாநிலம் முழுவதும் 1000 ரவுடிகள் கொண்ட பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக அரசியல்வாதிகளும் இருப்பதால் போலீசாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை. மேலும் மாவட்டங்களில் எஸ்பிக்கள், டிஐஜிக்களாக உள்ள அதிகாரிகளும் அரசியல்வாதிகள், ரவுடிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இதனால் குற்றங்கள் அதிகரித்தன.சென்னையைப் பொறுத்தவரை ரவுடிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டுச் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு ஏற்றார்போல வெடிகுண்டு வழக்கில் கூட ரவுடிகளை போலீசார் கைது செய்வதில்லை. ரவுடிகள் துணிச்சலாக கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்யாமல் உள்ளனர். இந்தநிலையில் தற்போது சென்னையில் அதிகாரிகள் மாற்றம் நடந்த பிறகு ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். ஆனாலும் சில பகுதிகளில் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேநேரத்தில் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஜாதி, மதம், அரசியல் என 3 கட்டங்களாக பிரிந்து உள்ளனர். இந்த 3 பிரிவினரையும் ஆளும் கட்சியினர் அரவணைப்பில் உள்ளதால் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. மேலும் தென் மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகளை நியமிக்கும்போது வடமாநில அதிகாரிகள் அல்லது தண்டனைக்குறிய அதிகாரிகளை அங்கு நியமிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் அவர்களும் ரவுடிகள், குற்றவாளிகளுடன் இணைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடிகள் போலீசாரை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவலர் சுப்பிரமணியம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி மீது 4 கொலை வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தூத்துக்குடிக்கு புதிதாக சென்ற எஸ்பி ஜெயக்குமார்தான், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பின்னர்தான் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தலைமறைவு குற்றவாளிகளை தேடத் தொடங்கினர். அவர்கள் கைதும் செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்போகும்போதுதான் நேற்று கொடூரமாக காவலர் சுப்பிரமணியம் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொடூர ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அதில் ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். சென்னையில் மட்டும் 300 ரவுடிகள் உள்ளனர். மாநிலம் முழுவதும் ஏபிளஸ் பிரிவில் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

சிறியூர் செல்லபாண்டி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons