சென்னை:கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்ன தானம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:மத்திய நிதி மந்திரி, ஜனாதிபதி என பெண்களுக்கு பல இடங்களில் பா.ஜ.க. முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையலறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேசவேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ம் ஆண்டு வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்துகொண்டு விட்டார்.திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்பது புரியவில்லை. தி.மு.க.வில் இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்
The short URL of the present article is: https://reportertoday.in/6ae7