டிராக்டர் ஓட்டிக் கொண்டே வந்து, வெள்ளநீர் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பாஜக எம்எல்ஏவை பொதுமகக்ள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தமிழகத்தில் பருவமழை கொட்டி வருகிறது.. இனியும் பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையில் தமிழகத்தின் மாவட்டங்களில் ஆறு, ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன… பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது… அதிலும் சென்னை 3 நாள் மழைக்கே நீரில் மிதந்து கொண்டிருக்கிறது.

அதேபோல நெல்லை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது.. நெல்லை மாநகர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் வடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை டவுன் காட்சி மண்டபம் தொண்டர் சன்னதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அருகிலுள்ள கண்டியபெரி மற்றும் கிருஷ்ண பேரி ஆகிய குளங்களில் இருந்து வெளியேறிய நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.

இதன்காரணமாக, ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.. டவுண் முழுவதுமே மழை நீர் பெருக்கடுத்து ஓடுகிறது.. வாகனங்களால் செல்ல முடியவில்லை.. இதனால் அந்த பகுதி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.. இந்நிலையில், நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டவுணில் ஏற்பட்டுள்ள மழைநீர் பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்றார்.. காரில்தான் வந்திருந்தார். ஆனால், அங்குள்ள சில தெருக்களில் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால், உடனடியாக டிராக்டர் வண்டியை வரவழைத்தார்.. அந்த வண்டியில் ஏறி உட்கார்ந்து அவரே ஓட்டிக் கொண்டு அந்த தெருக்களில் நுழைந்தார்.. மழைநீர் பாதிப்புகளை பார்வையிட்டபடியே ஆய்வு செய்தார்.. டிராக்டர் ஓட்டிக் கொண்டு எம்எல்ஏ வருவதை பார்த்தது தொகுதி மக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. பின்னர் அவர்களிடம் சென்று குறைகளை கேட்டறிந்தார் நயினார்..

இறுதியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, பாஜக வெற்றி பெற்ற தொகுதி இது என்பதால் டவுண் பகுதி புறக்கணிக்கப்படுகிறது… இந்த 2 நாட்களாக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன்… தொகுதியில் மழை பெய்தால் சந்திக்க உள்ள பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே கலெக்டரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் 10 முறைக்கு மேல் மனு அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.. மீட்பு பணிகளும் மந்தமாக உள்ளது. தண்ணீரை அகற்றுவதற்கான பணிகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் நேரில் ஆய்வு செய்ததோடு சரி, அங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அந்த மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு வெள்ள நீர் ஊருக்குள் புகாவண்ணம் தடுப்பதற்காக 15 கோடியில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் கோர்ட்டில் தடை பெற்று அந்த திட்டத்தையும் செயல்படுத்தப்படவில்லை.

அரசு வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் நீர்நிலைகளில் கட்டிடக் கழிவுகளை கொட்டுவது, ஆக்கிரமிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது” என்றார். நயினார் நாகேந்திரன் டிராக்டர் ஓட்டி வந்த வீடியோவும், வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு மழை நீரில் நடந்து வந்து மக்களை சந்தித்து குறைகளை கேட்ட போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons