நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தல் அமைதியாக நடந்தது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறினாலும், சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு தொடர்பான புகார்களால் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குச்சாவடிக்குள் புகுந்து குடிபோதையில் வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு எந்திரம் பழுது உள்ளிட்ட இடையூறுகள், பிரச்சினைகளும் நடந்தன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளான சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி (எண் 1174), 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி (எண் 5059), மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 17 டபிள்யூ), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 16 எம், 16 டபிள்யூ), திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 57 எம், 57 டபிள்யூ) என 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இன்றைய தினமே வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாவல் அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன. இந்த வாக்குகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons